தர்மபுரி, ஏப்.11: ஏரியூர் அடுத்த மூங்கில்மடுவு கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (45). விவசாயியான இவருக்கும், அக்கா மகனான சூர்யபிரகாஷ் (30) என்பவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வருகிறது. நேற்று முன்தினம், இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில், அக்கம் பக்கத்தினர் விலக்கி விட்டனர். பின்னர் பெருமாள் அருகில் உள்ள கடைக்கு டீ குடிக்கச் சென்றார். அப்போது, சூர்யபிரகாஷ், நண்பர்கள் 4 பேருடன் டீக்கடைக்கு சென்று பெருமாளிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில் சூர்யபிரகாஷ் தரப்பினர் பெருமாளை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக பெருமாள் கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். இதுபற்றிய புகாரின் பேரில், ஏரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாஷ், வெற்றிவேல், சேது ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.
previous post