கோவில்பட்டி, டிச. 28: கோவில்பட்டி கிருஷ்ணன் கோவில் திடலில் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை சார்பில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி கவன ஈர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். கவன ஈர்ப்பு கூட்டத்தில் தமிழ்நாட்டில் மழை வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும். ஏரல், வைகுண்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பெரும்பாலான வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு கூடுதல் நிதியை தமிழக அரசு வழங்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தொழில் கடன் வழங்க வங்கிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி பேசினர். தமிழ்நாடு வியாபாரி சங்க பேரவை மாநில தலைவர் முத்துக்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் தமிழரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஜாகிர் உசேன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநில செயற்குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், செல்வம் என்ற செல்லத்துரை, மாவட்ட செயலாளர் பாலமுருகன், மாவட்ட இளைஞரணி தலைவர் முத்து பிரகாஷ், மாவட்ட துணைத் தலைவர் அமிர்தராஜ், நகர தலைவர் மாரிமுத்து குமார், நகர செயலாளர் ரமேஷ், நகர பொருளாளர் விக்னேஷ், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.