அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட தொழிற் சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் அண்ணாசிலை அருகே ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலர் தண்டபாணி, தொமுச மாவட்ட கவுன்சில் செயலர் மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலர் துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் விஜயகுமார், எச்.எம்.எஸ் மாவட்டச் செயலர் ராமசுவாமி ஆகியோர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் பின்னர் அவர்கள் ரயில் மறியல் நடத்த ஊர்வலமாகச் சென்றனர். செந்துறை சாலை அருகே சென்ற போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கேயே சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து 63 பெண்கள் உள்பட 125 பேரை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.