Friday, May 17, 2024
Home » ராமேஸ்வரம் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த புதிய இணையதளம் முகவரியை அமைச்சர் வெளியிட்டார்

ராமேஸ்வரம் சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த புதிய இணையதளம் முகவரியை அமைச்சர் வெளியிட்டார்

by Ranjith

பரமக்குடி, பிப். 17: ராமேஸ்வரம் சுற்றுலா தளத்தை மேம்படுத்த புதிய இணையதள முகவரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, அரிச்சல் முனை, தேவிபட்டினம், ஏர்வாடி, தொண்டி, அதியமான் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளது. இந்த சுற்றுலா தலங்களுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புரோக்கர்களின் தவறான நடவடிக்கையால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் கூடுதல் பணம் செலவழிக்கின்ற சூழ்நிலை உள்ளது.

பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் www.rameswaramtourism.org என்ற புதிய சுற்றுலா இணையதள முகவரி அறிமுகபடுத்தப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் புதிய இணையதள முகவரியை அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்வில் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி, எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன், கரு. மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த இணையதளம் மூலமாக ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் குறைந்த செலவில் ராமேஸ்வரம் முழுவதும் சுற்றி பார்க்கவும், உணவு வகைகள், ஹோட்டல்கள், விடுதிகள், விடுதி கட்டணங்கள், ரயில், பேருந்து வசதி உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ளவும், முன்பதிவு செய்து கொள்ளவும் வசதியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் உள்ள குறைகள் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய ‘ஓரிடத்தில் ஒருங்கிணைந்த மக்கள் சேவை’ என்ற திட்டத்தின் கீழ் புதிய கியூஆர் ஸ்கேன் கோடு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கியூஆர் கோடை பயன்படுத்தி பள்ளிகள், நியாய விலை கடைகள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி ஆகியவற்றில் உள்ள குறைகள் குறித்து வீட்டில் இருந்தபடியே மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் அளிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை சார்பில் தையல் இயந்திரம், மூன்று சக்கர வாகனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

You may also like

Leave a Comment

16 + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi