நொய்டா: ரூ2.5 கோடி செக் மோசடி வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சேவாக் மனைவி கோர்ட்டில் ஆஜரானார். அவர் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி சேவாக் மீது ரூ. 2.5 கோடி மதிப்பிலான செக் மோசடி வழக்கு ஒன்று உத்தரபிரதேச மாநிலம் கவுதம் புத்தம் நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. லக்கன்பால் புரமோட்டர்ஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்திடம் இருந்து எஸ்எம்ஜிகே (ஆர்த்தி சேவாக் பங்குதாரர்) நிறுவனம் ஆர்டரை எடுத்த விவகாரத்தில், ரூ.2.50 கோடிக்கான காசோலை வழங்கப்பட்டது. ஆனால், அந்த காசோலையை வங்கியில் கொடுத்த போது, அதிலிருந்து பணம் எடுக்க முடியவில்லை. அதனால் அந்த காசோலை பவுன்ஸ் ஆனது. அதையடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் ஆர்த்தி சேவாக் மீது செக் மோசடி வழக்கு தொடுத்தனர். இருந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஆர்த்தி சேவாக் வழக்கை இழுத்தடித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு ஜூலை முதல் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளியே வரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது. அதையடுத்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜரான ஆர்த்தி சேவாக், ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட்டை திரும்பப் பெற விண்ணப்பித்தார். அவரது மனுவை நீதிபதி ஏற்றுக் கொண்டார். இருந்தும் ஜாமீன் கேட்டு மீண்டும் ஆர்த்தி சேவாக் மனு தாக்கல் செய்துள்ளார்….