தேனி, பிப். 13: தேனி பழைய பஸ்நிலைய வளாகத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்ட செயலாளர் பெத்தாட்சிஆசாத் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இம்மனுவில், தேனி அல்லிநகரம் நகராட்சி பகுதியில் ராஜவாய்க்கால் அமைந்துள்ளது. டிசம்பர் மாதம் குடியிருப்புகள், வழிபாட்டுத்தலங்கள் என இக்கால்வாய் ஆக்கிரமிப்புகள் கோட்டாட்சியர் மேற்பார்வையில் பாரபட்சமின்றி அகற்றப்பட்டது. பழைய பேருந்து நிலையத்திற்குள் உள்ள நகராட்சி சம்மந்தமான ஆக்கிரமிப்புகள் எதுவும் அகற்றப்படவில்லை.
மேலும், இக்கால்வாயில் தேங்கியுள்ள கழிவுநீரால் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. எனவே, நகராட்சி சம்பந்தமான பழைய பேருந்து நிலைய ஆக்கிரமிப்புகளை அகற்றவும், ராஜவாய்க்காலின் கழிவுநீர் கடந்து செல்லவும், கொட்டக்குடி ஆற்றில் தடுப்பணையில் சேதமடைந்துள்ள மதகுகளை செப்பனிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.