ராசிபுரம், ஏப்.15: ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தினால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் சேதம் ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் நகராட்சி புதிய பஸ் நிலையம் பின்புறம் நகராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்டி தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை பிரிக்கும் பணிகளும் நடந்து வருகிறது. மக்காத குப்பை கொட்டும் பகுதியில் மர்ம நபர்கள் அவ்வப்போது தீ வைத்து செல்லும் போது பெரும் புகை மண்டலம் ஏற்பட்டு, அந்த பகுதி மக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். இந்நிலையில், மக்கும் மற்றும் மக்கா குப்பை கிடங்கில் நேற்று மதியம் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால், அங்கு இருந்த பொருட்கள் மற்றும் சிறிய அளவிலான இயந்திரங்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், ராசிபுரம் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர்.
இது குறித்து ராசிபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வெப்பத்தின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா அல்லது மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா என்ற பல்வேறு கோணங்களில், அங்குள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.