சுரண்டை, ஏப்.15:பாஜ மதவெறியை தூண்டி இந்தியாவை துண்டாட நினைக்கிறது என சுரண்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆவேசமாக பேசினார். இந்தியா கூட்டணியில் தென்காசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி குமாருக்கு ஆதரவாக நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்திற்கு ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், மதிமுக துணை பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், டாக்டர் சதன் திருமலைகுமார் எம்எல்ஏ, மாவட்ட செயலாளர் ராமஉதயசூரியன், வடக்கு மாவட்ட செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், ஏ.டி.நடராஜன், சுரண்டை நகர திமுக பொறுப்பாளர் கூட்டுறவு கணேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் மருதசாமி பாண்டியன், விசிக பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பொன் மகேஸ்வரன் வரவேற்றார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது,
திமுக தொண்டர்களால் வளர்ந்த இயக்கம். திமுகவிற்காக எந்த தியாகத்தையும் செய்ய துணிந்தவர்கள். பாஜவின் உருட்டல், மிரட்டல்களுக்கு எல்லாம் திமுக, மதிமுக தொண்டர்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள். பாஜ அரசு 10ஆண்டுகளில் எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் பொதுத்துறை நிறுவனங்களை மட்டுமே விற்றுள்ளது. சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியாத பாஜ, மதத்தின் பெயரால் பிரிவினையை ஏற்படுத்தி இந்தியாவை துண்டாட நினைக்கிறது. பாஜவின் கனவு ஒருபோதும் பலிக்காது.
திமுக, மதிமுக எந்தவொரு மதத்திற்கும் எதிரான கட்சி அல்ல. மதத்தின் பெயரால் நடக்கும் பிரிவினை, மூடநம்பிக்கைகளுக்கு மட்டுமே எதிரானவர்கள். நானே எனது சொந்த நிதியில் எத்தனையோ கோயில்களை கட்டி கொடுத்துள்ளேன். முதல்வர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சி உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. கனடாவில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சிறப்பான திராவிட மாடல் ஆட்சிக்கு சான்று. அடுத்த தலைமுறை தேர்தலை சந்திக்கவும், இந்தியாவில் ஜனநாயகம் தொடரவும், அடித்தட்டு மக்களின் கோரிக்கை நிறைவேறவும் இந்தியா கூட்டணியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராணி குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என பேசினார்.
நிகழ்ச்சியில் ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, ஜேசுராஜன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஸ்வரன், வர்த்தக அணி அமைப்பாளர் முத்துக்குமார், ஒன்றிய கவுன்சிலர் வீராணம் சேக் முகமது, சுரண்டை நகர நிர்வாகிகள் ஆறுமுகசாமி, பூல்பாண்டியன், சுப்பிரமணியன், ஜெயராஜ், சங்கரநயினார், ஆலடிப்பட்டி ராமசாமி, சாமுவேல் மனோகர், சக்தி, கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், ஜேம்ஸ், மொழிப்போர் தியாகி சங்கரபாண்டியன், கல்பனா அன்னப்பிரகாசம், சங்கரேஸ்வரன், வேல்சாமி, செந்தில், கோமதிநாயகம், டான் கணேசன், பெடரல் கார்த்திக், குறுங்காவனம் வெள்ளத்துரை பாண்டியன், முருகன், மதிமுக நிர்வாகிகள் தங்கம், சக்திவேல், விஜயலட்சுமி கனகராஜ், மாரியப்பன், தங்கராஜ் சரவணன், கீதா முத்துசாமி, ஆறுமுகசாமி, செல்வேந்திரன், தேனம்மாள், கோபால், சுப்பிரமணியன், சமுத்திரம், அழகுதுரை, வைகோ ராஜ், வேலு உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்றனர். துரைமுருகன் நன்றி கூறினார்.