பழநி, ஏப். 20: யுபிஎஸ்சி தேர்வு மூலம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட அகில இந்திய பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 685 இடங்களை நிரப்ப தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் தேர்வானவர்களில் தமிழக மாணவர்கள் சொற்ப அளவிலானோர் மட்டுமே ஆகும். இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது முதல் நிலை தேர்வு ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் மட்டுமே நடத்தப்படுவதால்தான் என கூறப்படுகிறது.
ஆனால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளை சராசரியாக சுமார் 20 லட்சம் பேர் எழுதுகின்றனர். இதற்கு காரணம் மாணவர்களிடையே உள்ள விழிப்புணர்வும், ஆர்வமுமே என கூறப்படுகிறது. மேலும், வினாக்கள் தாய் மொழியான தமிழ் மொழியில் கேட்கப்படுகின்றன. எனவே, யுபிஎஸ்சி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் சொற்ப அளவில் தேர்ச்சி பெறுவதற்கான காரணங்களை தமிழக அரசு குழு அமைத்து ஆராய்ந்து கண்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.