ஈரோடு, அக்.20: மொடக்குறிச்சி ஒன்றிய அளவில் நடந்த கலைத்திருவிழா போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் முதலிடம் பெறும் மாணவருக்கு கலையரசன் பட்டமும் மாணவிகளுக்கு கலையரசி என்ற பட்டமும் விருதும் வழங்கப்படுகிறது. மேலும் வெளிநாடு கல்வி சுற்றுலா தமிழக அரசு சார்பில் அழைத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில், மொடக்குறிச்சி ஒன்றிய வட்டார அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டிகளை மொடக்குறிச்சி எம்எல்ஏ சரஸ்வதி தொடங்கி வைத்தார். மொடக்குறிச்சி வட்டார கல்வி அலுவலர்கள் சாமுண்டீஸ்வரி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை லதா வரவேற்றார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை மொடக்குறிச்சி வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் செய்திருந்தனர். விழாவின் முடிவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா நன்றியுரையாற்றினார். போட்டிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.