கோவை, அக்.20: கோவை நகர், புறநகரில் தற்கொலை இறப்பு அதிகமாகி வருகிறது. 40 சதவீதம் பேர் நடுத்தர வயதினர் என தெரியவந்தது. குடும்ப பிரச்னை, மது போதை பழக்கம், குடும்பத்தினருடன் ஏற்படும் வாக்குவாதம், கணவர் மனைவி இடையே நிலவும் பிரச்னைகள், கருத்து வேறுபாடு, பிரிவு, விரக்தி போன்ற காரணங்களினால் தற்கொலை செய்வதாக தெரிகிறது. பெண்களை காட்டிலும் ஆண்கள் தற்கொலை செய்வது அதிகமாகி வருகிறது. நடுத்தர வயதினர், ஏழ்மை நிலைமையில் வாழ்க்கை நடத்துவோர் இறப்பு அதிகமாகி வருகிறது.
தற்கொலை முயற்சியில் காப்பாற்றப்படும் நபர்களுக்கு மருத்துவமனைகளில் மன நல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது. இனி தற்கொலை செய்யும் எண்ணத்தை தவிர்க்கும் வகையில் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. மீண்டும் அந்த நபர் தற்ெகாலைக்கு முயற்சிப்பதை தடுக்கும் வகையில் இந்த ஆலோசனை வழங்கப்படுகிறது. போலீசார் கூறுகையில், ‘‘ குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்னைகளுக்குகூட தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
மது போதையில் வீட்டிற்கு செல்லும் நபர்கள், குடும்பத்தினருடன் தகராறு செய்து தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதாக புகார்கள் வருகிறது. தூக்கு போடுபவர்கள், தீக்குளிப்பவர்களை காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது. விஷம் குடிப்பவர்கள் தீவிர சிகிச்சையில் உயிர் பிழைத்து விடுகிறார்கள். இறப்பிற்கான காரணம், தற்கொலைக்கு தூண்டிய நிகழ்வுகள் இருக்கிறதா என விசாரிக்கிறோம். விரக்தி, வெறுப்பினால் தற்கொலை செய்த ஊழியர்கள், தொழிலாளர்களால் அவர்களது குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்’’ என்றனர்.