மேல்மலையனூர், பிப். 24: மேல்மலையனூரில் பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, அம்மனை தரிசித்து தங்கள் வேண்டுதல் நிறைவேற அம்மனுக்கு காணிக்கையாக பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். கடந்த மாதம் தை அமாவாசை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ஊஞ்சல் உற்சவ நிகழ்வில் கலந்து கொண்டு, உண்டியலில் காணிக்கை செலுத்தி இருந்தனர்.
இதையடுத்து விழுப்புரம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் சிவலிங்கம் முன்னிலையில், கோயில் வளாகத்தில் நேற்று முன்தினம் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1 கோடியே 11 லட்சத்து 96 ஆயிரத்து 281 பணம், 442 கிராம் தங்கம், 1405 கிராம் வெள்ளி உள்ளிட்டவைகளை உண்டியலில் செலுத்தி இருந்தனர். கோயில் உதவி ஆணையர் ஜீவானந்தம், அறங்காவலர் குழு தலைவர் சுரேஷ், அறங்காவலர்கள் மதியழகன், சேட்டு என்கிற ஏழுமலை, பச்சையப்பன், சரவணன், வடிவேல், சந்தானம் மற்றும் மேலாளர் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.