சென்னை: வளி மண்டல மேல் அடுக்கு காரணமாக தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் த ற்போது வட கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், 12ம் தேதி வரை பருவமழை நீடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. அதில் அதிகபட்சமாக திருத்துறைபூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 60மிமீ மழை பெய்துள்ளது.அதிராமபட்டினம், பரங்கிப்பேட்டை, அறந்தாங்கி 40மிமீ, வேப்பூர், திருவாடணை, செய்யூர், மணல்மேல்குடி, திண்டிவனம் 30மிமீ, வந்தவாசி, இளையான்குடி, காரியப்பட்டி, உசிலம்பட்டி, ஜெயங்கொண்டம் 20மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில், வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும், பிற கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களை பொருத்தவரையில் லேசானது முதல் மிதமான மழை இன்று பெய்யும். நாளையும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை, கடலூர், கள்ளக்குறிச்சி, தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். இதே நிலை 8ம் தேதி வரை நீடிக்கும். சென்னையை பொருத்தவரையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும்….