ஓசூர், நவ.19: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் சஷ்டிவிழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ஓசூர் பெரியார் நகர் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வேல்முருகன் கோயிலில், கடந்த 13ம் தேதி சஷ்டி விழா துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் முருகப்பெருமானுக்கு சிறப்பு ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று முருகன் சூரனை வதம் செய்வதற்காக தவமிருந்து, தனது தாயார் பார்வதிதேவியிடமிருந்து வெற்றிவேலை பெறும் வைபவம் நடைபெற்றது.
இதனையொட்டி, அதிகாலை முதல் பால், சந்தனம், பன்னீர், திருநீறு, குங்குமம், மஞ்சள், நெய், வெண்ணெய் உள்ளிட்ட திரவியங்களை கொண்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு தங்கக் கவசம் சாத்தி மலர் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், வேத மந்திரங்கள் ஓத மகா மங்களாரத்தி, தீபாராதனை சமர்ப்பிக்கப்பட்டன. தொடர்ந்து சூரபத்மனை வதம் செய்யும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இன்று சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாகலமாக நடை
பெறுகிறது.