கோவை, மார்ச் 19: கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட முதியோர் எளிதாக வாக்களிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்ட அறிக்கையில், ‘‘பாராளுமன்ற தேர்தலுக்கு கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பத்து சட்டமன்ற தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமத்தினை தவிர்க்கும் வகையில் அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தினை பெற அவர்களின் இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், படிவம் – 12டி மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருவார்கள். அப்போது, உரிய படிவத்தில் மாற்றுத்திறனாளிகள், முதியோர் தங்களின் விருப்பத்தினை படித்து பார்த்தும் அல்லது படிக்க கேட்டும், ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலினை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து ஒத்துழைப்பினை மாவட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பது தொடர்பான, தங்களது விருப்பத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாகவோ அல்லது மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மற்றும் பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்குரிய தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகத்திலும் அல்லது தங்களது பகுதிக்குட்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (வட்டாட்சியர் அலுவலகம்) அலுவலகத்திற்கோ நேரில் சென்று வரும் 24ம் தேதிக்குள் படிவம் 12டி-யினை, இதற்காக பிரத்யேகமாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலரிடம் உரிய ஒப்பம் செய்து சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.