Friday, May 17, 2024
Home » மாமல்லபுரம் பேரூராட்சியில் ₹50 கோடியில் அதிநவீன பேருந்து நிலையம்: பணிகளை விரைந்து தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

மாமல்லபுரம் பேரூராட்சியில் ₹50 கோடியில் அதிநவீன பேருந்து நிலையம்: பணிகளை விரைந்து தொடங்க பொதுமக்கள் வலியுறுத்தல்

by Karthik Yash

மாமல்லபுரம், மே 12: மாமல்லபுரத்தில் 31 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட மாமல்லபுரம் அதிநவீன பேருந்து நிலைய கட்டுமான பணிக்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில் ₹50 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த பணிகளை உடனே தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். யுனெஸ்கோ அமைப்பால், 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும், இங்கு பல்லவ மன்னர்கள் குடைவரை மண்டபங்கள், கோயில்கள், புராதன சிற்பங்கள் ஆகியவற்றை பாறைகளை குடைந்து செதுக்கி உள்ளனர். அவைகள், உலக புகழ் வாய்ந்த பாரம்பரிய நினைவு சின்னங்களாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில் இன்னும் நவீன பேருந்து நிலையம் அமைக்கவில்லை. தற்போது, தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதியாக பேருந்து நிலையமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இந்த குறுகிய பேருந்து நிலையத்தில் 25க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள், மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் வந்து செல்கின்றன. இங்கு ஒரே நேரத்தில் ஏராளமான பஸ்கள் வருவதால், பஸ்களை நிறுத்த இடமில்லாததாலும், சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதாலும், அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி வெளியே செல்ல முடியாமல் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. மேலும், இந்த தற்காலிக பஸ் நிலையத்தில் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்படவில்லை. இதனால், பஸ் நிலையம் வரும் சுற்றுலாப் பணிகள் குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1992ம் ஆண்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் உள்ளது போன்று, ஒரு நவீன பஸ் நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது.

மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான கருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி, வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கடந்த 2006 முதல் 2011 வரை அப்போது தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நகருக்குள் இருந்த பஸ் நிலையத்தை வெளியே கொண்டு வர திட்டமிட்டு, பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள ₹18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஒன்றிய பொதுப்பணித் துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது.

பின்னர், அதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு, பணிகள் தொடங்கியது. அதன் பிறகு, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அப்பணி கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து, ஒதுக்கிய நிதியை ஒன்றிய பொதுப்பணித் துறை மீண்டும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும நிர்வாகத்திடம் ஒப்படைத்தது. தொடர்ந்து, அதிமுக அரசு ₹18 கோடியில் இருந்து, ₹25 கோடியாக உயர்த்தி தனியார் நிறுவனத்திடம் பஸ் நிலைய கட்டுமான பணியை ஒப்படைத்தது. தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு அங்கு மண் பரிசோதனைளும் மேற்கொள்ளப்பட்டு, பஸ் நிலையத்திற்கு உகந்த இடம் என சான்றிதழும் பெறப்பட்டது. அதன்பிறகு, அங்கு வேறு எந்த பணிகளும் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது.

ஆனால், ஆண்டுதோறும் இரண்டு அல்லது மூன்று முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடிக்கடி நேரில் வந்து பஸ் நிலையம் கட்டுவதற்காக ஆய்வு செய்கின்றனரே தவிர, பணிகள் தொடங்குவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளும் செய்யவில்லை. பஸ் நிலையத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6.79 ஏக்கர் நிலமும், நிலத்தடி நீரை உறிஞ்சும் வேலிகாத்தான் மரமும், ஒரு சில சீமைகருவேல மரங்கள் வளர்ந்து புதர்மண்டி காடு போல் காட்சி அளிக்கிறது. கடந்தாண்டு, மே 20ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், வீட்டு வசதித்துறை செயலாளர் இத்தேஷ் குமார் மக்வானா, காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி ஆய்வு செய்து திட்ட அறிக்கையை தயார் செய்து, விரைவில் பணிகள் தொடங்கி 15 மாதத்தில் அனைத்து பணிகளும் முழுமையாக முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என உறுதியளித்தனர்.

ஆனால், தொல்லியல் துறை தடை காரணமாக பணிகள் தடைப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் நடந்த சென்னை பெருநகர வளர்ச்சி மானியக் கோரிக்கையின்போது, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு, இருக்கக் கூடிய பல்வேறு வாய்ப்புகளில் ஒன்றான வெட்டுத் தீர்மானம் முன் வைக்கப்பட்டு, பேருந்து நிலையத்திற்கு நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை, திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி முன் வைத்தார். இச்சூழலில், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சிஎம்டிஏ துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு சட்ட மன்றத்திலேயே இந்த வெட்டுத் தீர்மானத்தின் அடிப்படையில், கோரிக்கைக்கு செவி சாய்த்து ₹50 கோடி பஸ் நிலைய கட்டுமான பணிக்கு செலவிடப்படும். மேலும், விரைவில் அங்கு ஆய்வு செய்து பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மானியக் கோரிக்கையில் அறிவித்தார்.

எனவே, உடனடியாக அங்கு பஸ் நிலையம் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி, குறிப்பிட்ட காலத்திற்குள் பஸ் நிலைய கட்டுமான பணிகளை முழுமையாக முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், ‘கடந்த 1992ம் ஆண்டு மாமல்லபுரத்தில் அதிநவீன பேருந்து நிலையம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 31 ஆண்டுகள் கடந்தும் எந்த பணிகளும் மேற்கொள்ளாமல் கிடப்பில் உள்ளது. மாமல்லபுரம் உலக புகழ் வாய்ந்த சுற்றுலாத்தலம் என்பதால், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் சிரமமின்றி வந்து செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு சென்னையில் கோயம்பேடு, தி.நகர், பிராட்வே, அடையார், திருவான்மியூர், கிண்டி, அசோக் பில்லர், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

ஆனால், போதிய பஸ்கள் நிறுத்த இடமில்லாததால் தற்போது, மாநகர பஸ்கள் மற்றும் தமிழ்நாடு அரசு டவுன் பஸ்கள் மிகமிக குறைந்த அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் முறையான இருக்கைகள் மற்றும் நிழற்குடை இல்லாததால் குறுகிய இடத்தில் பல மணி நேரம் கால்கடுக்க பஸ்சுக்காக காத்திருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், சமீபத்தில் நடந்த சென்னை பெருநகர வளர்ச்சி மானியக் கோரிக்கையில், மாமல்லபுரம் பஸ் நிலைய கட்டுமான பணிக்கு ₹50 கோடி செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள், ஆட்டோ மற்றும் கால்டாக்சி ஓட்டுனர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு வந்தால், இங்கு வரும் அனைவரும் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஜாலியாக வந்து, பல்லவ சிற்பங்களை சுற்றிப்பார்த்து சுலபமாக வீடு திரும்புவார்கள்’ என்றனர்.

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் இருந்து புதுச்சேரி மாநிலம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் மாமல்லபுரத்துக்கு உள்ளே வந்து சென்றது. பின்னர், பஸ்கள் திரும்ப போதிய இடம் இல்லாததால் இங்கு வரும் பஸ்களின் படிப்படியாக எண்ணிக்கை குறைக்ப்பட்டு, தற்போது புதுச்சேரி செல்லும் அனைத்து பஸ்களும் இசிஆர் சாலை வழியாகவே செல்கிறது. எனவே, பஸ் நிலைய பணிகளை விரைந்து முடித்து புதுச்சேரி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பஸ்களும் மாமல்லபுரம் வந்து செல்ல போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

nineteen + twelve =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi