தஞ்சாவூர்,டிச.9: ஐசிஐசிஐ வங்கி அறக்கட்டளை சார்பில் தஞ்சாவூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ள பேட்டரி வாகனங்களை மேயர் சண்.ராமநாதன் வழங்கினார். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு குப்பைகள் அள்ளுதல் உள்ளிட்ட தூய்மை பணியை மேற்கொள்வதற்காக பேட்டரியில் இயங்கும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஐசிஐசிஐ. வங்கியின் அறக்கட்டளை (கார்ப்பரேட் சோசியல் ரெஸ்பான்பிலிட்டி ) நிதியில் இருந்து ரூ.30 லட்சம் மதிப்பில் 5 பேட்டரியால் இயங்கும் வாகனங்கள் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டது.
இந்த வாகனங்களை மேயர் சண்.ராமநாதன், ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் தூய்மை பணியாளர்களுக்கு வழங்கினர். இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், ஐசிஐசிஐ வங்கியின் சி.ஆர்.சி. நிதியிலிருந்து தஞ்சாவூர் மாநகராட்சிக்கு ரூ.30 லட்சம் மதிப்பில் 5 பேட்டரியால் இயங்கும் குப்பைகள் அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் இன்னும் 10 வாகனங்கள் வாங்கி தருவதாக கூறியுள்ளனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் ஐசிஐசிஐ வங்கியின் மண்டல மேலாளர் சீனிவாசா யோகானந்த், கிளை மேலாளர் கிருத்திகா மற்றும் வங்கி ஊழியர்கள், மாநகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.