ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், தேவிபட்டினத்தை சேர்ந்தவர் முனியசாமி. உப்பளம் மற்றும் இறால் பண்ணை அதிபரான, இவரிடம் தொழில் அபிவிருத்தி செய்வதற்காக ரூ.15 கோடி கடன் வாங்கி தருவதாக சினிமா நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கூறியுள்ளார். அதற்கு டாக்குமெண்டேஷன் சார்ஜ் ஆக ரூ.14 லட்சம் தர வேண்டும் என்று கூறவும், இறால் பண்ணை அதிபர் முனியசாமி அந்த தொகையை கடந்த 2019ம் ஆண்டு வழங்கியிருக்கிறார். ஆனால் அவருக்கு தற்போதுவரை பவர்ஸ்டார் கடன் வாங்கி கொடுக்கவில்லை. டாக்குமெண்டேஷன் சார்ஜையும் திருப்பி தரவில்லை. இந்நிலையில் முனியசாமிக்கு 2020ம் ஆண்டு ரூ.14 லட்சத்திற்கான காசோலையை பவர் ஸ்டார் சீனிவாசன் கொடுத்துள்ளார். செக் வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முனியசாமி, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் இருந்து வந்தார். நேற்று ராமநாதபுரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி நிலவேஸ்வரன், செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாத குற்றத்திற்காக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.