காஞ்சிபுரம்: மலேசியாவில் நடந்த, தேசிய அளவிலான கராத்தே போட்டியில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர்கள் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். மலேசியா தலைநகர் கோலாலம்பூரில், கடந்த ஜூன் மாதம் 23 முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள், தேசிய அளவிலான, 22வது ஒப்பன் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி பல்வேறு வயது பிரிவுகளில் நடந்தது. இதில் இலங்கை, இந்தியா, மலேசியா, இந்தோனேஷியா உள்பட 15 நாடுகளை சேர்ந்த 1,500 கராத்தே வீரர்கள் பங்கேற்றனர்.
இதில், இந்தியா சார்பில் காஞ்சிபுரத்தை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். அவர்களில், 14 முதல் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் வி.முகில்பிரசாத், குமித்தே பிரிவிலும், எஸ்.திவாகர், கட்டா பிரிவிலும் வெள்ளி பதக்கம் வென்றனர். இதோபோல், 12 முதல் 13 வயதுக்கு உட்பட்டோரில் குமித்தே பிரிவில் உ.கவின், எஸ்.உமேஷ் இருவரும் வெண்கலம் பதக்கத்தை தனதாக்கினர்.