பாகூர், மார்ச் 24: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள், மதுபாட்டில்களை வழங்குவதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கிருமாம்பாக்கம் ஏஎஸ்ஐ ஜெயராமன் தலைமையிலான போலீசார் உச்சிமேடு சாலை, கேசவன் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் வருவதை கண்டதும், ஒருவர் அவர் வைத்திருந்த பையை கீழே போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தார். சந்தேகம் அடைந்த போலீசார், அந்த பையை சோதனையிட்டபோது, அதில் மது பாட்டில்கள் இருந்தது தெரிந்தது. அதில் 6 லிட்டர் கொண்ட 9 மதுபாட்டில்களை போலீசார் கைப்பற்றி கலால் துறையிடம் ஒப்படைத்தனர். மேலும், தப்பி ஓடிய நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.