வேப்பூர், மார்ச் 24: வேப்பூர் அடுத்த ஆதியூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் செல்வராஜ் (38). இவர் தனது தாயார் கொளஞ்சியம்மாளுடன் பைக்கில் சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் தனது ஊரிலிருந்து நிராமணி கிராமத்தில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு செல்ல வேப்பூர்-பூலாம்பாடி சாலையில் சென்றனர். அப்போது வேப்பூர் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்த போது சாலையோரத்தில் எள்ளு காய் போர் போட்டிருந்ததை கவனிக்காமல் எதிரே வந்த வேன் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் பைக்கில் வந்த செல்வராஜ், கொளஞ்சி ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் செல்வராஜ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.