திருமலை: ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினருக்கும், தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் கற்கள் வீசியதில் பலர் படுகாயமடைந்தனர். ஆந்திரா மாநிலத்தில் வரும் 13ம் தேதி சட்டமன்ற, நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கிழக்கு கோதாவரி மாவட்டம் நல்லஜர்லா என்ற இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஆளும் ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினரும், தெலுங்கு தேசம் கட்சியினரும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டனர்.
அப்போது ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் தானேட்டி வனிதா பிரசாரத்தின்போது தெலுங்கு தேசம் கட்சியினர் கூச்சலிட்டனர். இதனால் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தெலுங்கு தேசம் கட்சியினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் தெலுங்கு தேசம் கட்சியினர் பலர் காயமடைந்தனர். இதற்கிடையே மாநில உள்துறை அமைச்சர் தானேட்டி வனிதா நேற்று முன்தினம் இரவு கட்சி நிர்வாகி வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த தெலுங்கு தேசம் கட்சியினர் நாற்காலிகள், பிரச்சார வேன் மற்றும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். மாநில உள்துறை அமைச்சர் வாகனத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்பி மற்றும் போலீஸ் படையினர் அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இருப்பினும் அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இதனால் அங்கு போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.