Monday, June 17, 2024
Home » பொய் சொன்னதால் வாலிபரை காதலிக்க மறுப்பு விமான பணிப்பெண் வேலைக்கு போவதை தடுக்க பெண்ணின் முகத்தை பீர்பாட்டிலால் குத்தி சிதைப்பு: 25 தையல்களுடன் உயிருக்கு போராட்டம்; வாலிபர் கைது

பொய் சொன்னதால் வாலிபரை காதலிக்க மறுப்பு விமான பணிப்பெண் வேலைக்கு போவதை தடுக்க பெண்ணின் முகத்தை பீர்பாட்டிலால் குத்தி சிதைப்பு: 25 தையல்களுடன் உயிருக்கு போராட்டம்; வாலிபர் கைது

by kannappan

சென்னை: தனக்கு கிடைக்காத பெண், வேறு யாருக்கும் கிடைக்க கூடாது என்பதால் வாலிபர் ஒருவர் தன் காதலியான விமான பணிப்பெண், வேலைக்கு போவதை தடுக்க 25 முறை பீர் பாட்டிலால் அவரது முகத்தில் குத்தி சிதைத்தார். அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட இளம்பெண் முகத்தில் 25 தையல்களுடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். ஓட்டல் மேனேஜ்மென்ட் படித்துள்ள கேரள மாநிலம் கர்த்தனக்கல் பகுதியை சேர்ந்தவர் சோனு ஜோசப் (20). இவர், சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள பிரபல ரெஸ்டாரன்ட்டில் 3 மாதங்களுக்கு முன்பு வேலைக்கு சேர்ந்தார். இவர், அதே பகுதியில் உள்ள மகளிர் விடுதி ஒன்றில் தங்கி வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், சோனு ஜோசப் கடந்த 14ம் தேதி இரவு பணி முடிந்து, தனது விடுதிக்கு தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், சோனு ஜோசப்பை வழிமறித்து, தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தினார். ஆனால் சோனு ஜோசப், திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்துவிட்டு, விடுதிக்கு செல்ல முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், திடீரென கையில் கொண்டு வந்த பீர் பாட்டிலை எடுத்து நடந்து சென்ற சோனு ஜோசப்பின் பின்பக்க தலையில் ஓங்கி அடித்தார். இதில் நிலைகுலைந்த சோனு ஜோசப் மயங்கி சாலையிலேயே விழுந்தார். அப்போதும் ஆத்திரம் தீராத அந்த வாலிபர், உடைந்த பீர்பாட்டிலால் சோனு ஜோசப் முகத்தில் சரமாரியாக குத்தி உள்ளார். மேலும், வயிறு, கழுத்து உள்ளிட்ட பகுதிகளிலும் குத்தினார்.இதை கவனித்த பொதுமக்கள் சோனு ஜோசப்பிற்கு உதவி கேட்டு அலறினர். பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடியதை கவனித்த அந்த வாலிபர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். முகம் சிதைக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சோனு ஜோசப்பை, பொதுமக்கள் மீட்டு ஆட்டோ மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிசிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சோனு ஜோசப்பிற்கு முகத்தில் 25 தையல்கள் போடப்பட்டும், உடல் முழுவதும் படுகாயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.சம்பவம் குறித்து மருத்துவமனை தகவலின்படி, கீழ்ப்பாக்கம் போலீசார் கொலை முயற்சி, பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் குற்றவாளியை பிடிக்க கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் சம்பவம் நடந்த மெட்ரோ ரயில் நிலைய கார் பார்க்கிங் முன்பு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகள் மற்றும் வாலிபரின் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரணை நடத்தினர். அதில், பெண்ணை கொலை செய்ய முயன்றது சென்னை வேப்பேரியை சேர்ந்த நவீன் (25) என்ற வாலிபர் என தெரியவந்தது. அதைதொடர்ந்து தனிப்படை போலீசார் நவீனை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.கைது செய்யப்பட்ட நவீன் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: கேரள மாநிலத்தை சேர்ந்த சோனு ஜோசப் என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் கடந்த 6 மாதங்களாக பழகி வந்தேன். எங்கள் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. பிறகு ஒருவருக்கொருவர் செல்போன் நம்பர்களை பேஸ்புக் மெசெஞ்ஜர் மூலம் பகிர்ந்து கொண்டோம். நான் அவரிடம் கடற்படையில் வேலை செய்வதாக கூறியிருந்தேன். அதை அவர் நம்பினார். ஆனால், நான் கடற்படையில் வேலை செய்யவில்லை. கடற்படை பணியில் சேர முயற்சி செய்து வருகிறேன். பிறகு என்னை நம்பி சோனு ஜோசப், சென்னைக்கு வந்தார். அதற்கான ஏற்பாடுகளை நான்தான் செய்து கொடுத்தேன். சென்னை வந்த பிறகு நானும் சோனு ஜோசப்பும் நேரில் சந்தித்து பேசி பழகி வந்தோம். பல இடங்களுக்கு இருவரும் சென்றோம்.பின்னர் நான்தான் அவரிடம் முதன்முதலில் காதலிப்பதாக கூறினேன். எனது காதலை அவர் ஏற்றுக்கொண்டார். அதன் பிறகு கடற்படையில் வேலை செய்யவில்லை என்று கூறி, அவரை சமாதானம் செய்ய முயன்றேன். ஆனால் அவர் அதை ஏற்கவில்லை. இதனால் எங்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சோனு ஜோசப், என்னை ஏமாற்றிய உன்னை, நான் எப்படி நம்புவது, நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறி சென்று விட்டார். அதன்பின் அவரை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு சமாதானம் செய்ய முயன்றேன். அவர் எனது நம்பரை எடுக்கவில்லை. பிறகு அவர் வேலை செய்யும் ரெஸ்டாரன்ட்டுக்கு நேரில் சென்று சந்தித்து எனது காதலை தெரிவித்தேன். ஆனால் அவர், பொய் சொல்லும் உன்னுடன் இனி நான் பேசமாட்டேன். என்னை தொந்தரவு செய்தால் போலீசில் புகார் அளிப்பேன் என்று கூறி மிரட்டினார்.எனது காதலை புரிந்து கொள்ளாமல் அவர் என்னை உதாசீனப்படுத்தினார். அதேநேரம் சோனு ஜோசப் ‘விமான பணி பெண்’ ஆகவேண்டும் என்று படித்து வருகிறார். அழகாக இருப்பதால்தான் எனது காதலை ஏற்க மறுக்கிறார். சோனு ஜோசப்பிற்கு அழகு இல்லை என்றால் அவர் விமான பணிப் பெண்ணாக முடியாது என்று முடிவு செய்தேன். அதேநேரம் என்னை பயன்படுத்தி கேரளாவில் இருந்து சென்னை வந்து வேலைக்கு சேர்ந்து பிறகு, என்னை விட்டு விலகி செல்கிறார். எனவே எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்க கூடாது என்று முடிவு செய்தேன்.எனவே, நான் அவரை கொலை செய்ய முடிவு செய்து, கடந்த 14ம் தேதி இரவு மது அருந்திவிட்டு பீர் பாட்டிலை உடலில் மறைத்து எடுத்துக்கொண்டு சோனு ஜோசப் வேலை செய்யும் ஓட்டல் முன்பு நின்று இருந்தேன். பிறகு பணி முடிந்து சோனு ஜோசப் விடுதிக்கு செல்ல நடந்து சென்றார். அப்போது, நானும் அவரை பின்தொடர்ந்து, எனது காதலை ஏற்றுக்கொள்ளும்படி கூறினேன். ஆனால் அவர் ஏற்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த நான், ஏற்கனவே திட்டமிட்டபடி கையில் கொண்டு வந்த பீர் பாட்டிலால் அவரை தாக்கினேன். அவர் மயங்கி விழுந்த பிறகு, அவரின் அழகான முகத்தை கொடூரமாக குத்தி சிதைத்தேன். அப்போதும் எனக்கு ஆத்திரம் தீராததால், அவரது உடல் முழுவதும் பாட்டிலால் குத்தி கொலை செய்ய முயன்றேன். ஆனால், பொதுமக்கள் ஓடி வந்ததால் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். …

You may also like

Leave a Comment

six + one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi