புழல், டிச. 12: புழல் சிறையில் கஞ்சா பொட்டலத்தை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். புழல் மத்திய சிறையில் தண்டனை பிரிவு, விசாரணை மற்றும் பெண்கள் பிரிவு என 3 சிறைச்சாலைகள் உள்ளன. இங்கு சுமார் 150 பெண்கள் உள்ளிட்ட 3,500க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இவர்களை தினமும் உறவினர்கள், நண்பர்கள் என பலர் வந்து பார்த்துச் செல்கின்றனர். சிறை வளாகத்தில் அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அவ்வப்போது சோதனை நடத்தி, கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் விசாரணை சிறையில் நேர்காணல் அறை அருகே, நேற்று முன்தினம் ஒரு பாலித்தீன் கவரால் சுற்றப்பட்ட பொட்டலம் இருந்தது. சிறை காவலர்கள் அதை எடுத்து பிரித்து பார்த்தபோது அதில் 50 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. கஞ்சா பொட்டலத்தை சிறை கைதிக்கு கொடுக்க வந்த நபர்கள், அதனை கொடுக்க முடியாமல் அங்கேயே போட்டுவிட்டுச் சென்று விட்டார்களா, அதை வீசி சென்ற நபர் யார் என சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேலும், இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.