சென்னை: எடப்பாடி பழனிசாமி வேஷம் கலைந்துகொண்டு இருக்கிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம் செய்துள்ளார். சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மசூதி காலனி, மடுவின் கரை, கன்னிகாபுரம், ரேஸ்கோர்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நிவாரண பொருட்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வடகிழக்கு பருவமழையின்போது பெய்யும் வழக்கமான மழையை விட கூடுதலாக மழை பெய்துள்ளது. மிக பெரிய மழைக்கு பிறகு 2 நாட்களில் மீட்பு பணிகள் நிறைவடைந்தது. அதை தொடர்ந்து நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் நிவாரணம் வழங்கி வருகின்றனர். ஆய்வு செய்ய நீதிபதிகள் மட்டுமின்றி யார் வேண்டும் என்றாலும் வரட்டும் அதில் எந்த தவறும் இல்லை.
இப்படி பெய்த மழைக்கு 4000 கோடி ரூபாயில் இல்லை 40,000 கோடி ரூபாயில் மழைநீர் வடிநீர் கால்வாய் கட்டினாலும் 2 அல்லது 3 நாட்கள் பாதிப்பு இருக்கும் என நீர்வள நிபுணர்கள் கூறுகின்றனர். மழை பெய்த நாள் அன்று கடல் சீற்றத்தால் மழைநீர் கடலுக்கு செல்லமுடியாத நிலை இருந்தது. மழைநீர் வடிகால் வழியாக மட்டுமே மழைநீர் வெளியேறியது. எடப்பாடி முதல்வராக இருந்த நேரத்தில் கொரோனாவால் தினமும் ஆயிரம் பேர் இறந்தனர். லட்சக்கணக்கான தொழில்கள் பாதிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் வழங்கவேண்டும் என்று கூறி இருந்தார் ஆனால் அவர் ரூ. 1000 மட்டுமே வழங்கினார். அப்படி கொடுத்தவர் தான் தற்போது ரூ.12,000 வழங்க வேண்டும் என்று கூறுகிறார். எடப்பாடி பழனிசாமி வேஷம் கலைந்துகொண்டு இருக்கிறது. மக்கள் அவரை புரிந்துகொண்டனர். இவ்வாறு அவர் கூறினார்.