புதுக்கோட்டை: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம் நடந்தது. புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்திட ஏதுவாய் மாதம்தோறும் முதல் வார வெள்ளிக்கிழமைகளில் திருநங்கைகள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது. அதன்படி இன்றையதினம் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வீட்டுமனைப் பட்டா, வேலைவாய்ப்பு, தொழில் கடன், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகிய கோரிக்கைகள் அடங்கிய 4 மனுக்களை திருநங்கைகள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களிடம் வழங்கினார். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், இம்மனுக்களின் மீது தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலருக்கு அறிவுறுத்தினார். மேலும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் இந்தியன் வங்கி, ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் இணைந்து நடத்தும் திருநங்கைகளுக்கான இலகுரக வாகனம் ஓட்டுநர் பயிற்சியினை, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி துவக்கி வைத்தார்.