தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள கதிர்நாயக்கன்அள்ளியைச் சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது 17 வயது மகள் அங்குள்ள பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தாள். இதே பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் பூவரசன் (28). இவர் மாணவியை காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணத்திற்கு கட்டாயப்படுத்தி உள்ளார். கடந்த ஆண்டு மார்ச் 18ம் தேதி தர்மபுரி குண்டல்பட்டியில் உள்ள பெருமாள் கோயிலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் கர்ப்பமடைந்த மாணவி தனது பெற்றோரை பார்க்க வேண்டும் என கூறி உள்ளார். ஆனால் கணவர் வீட்டார் மாணவியை அவரின் பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப மறுத்து வந்துள்ளனர். பின்னர் உறவினர்களின் அறிவுறுத்தலின் பேரில் மாணவியை பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். நிறைமாத கர்ப்பிணியாக பெற்றோர் வீட்டிற்கு சென்ற மாணவிக்கு கடந்த 5 மாதத்திற்கு முன் ஆண்குழந்தை பிறந்தது. இதனிடையே மாணவி தன்னை பூவரசன் ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு தற்போது மிரட்டுவதாக அரூர் அனைத்து மகளிர்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் பூவரசன் மற்றும் உறவினர்கள் 10 பேர் மீது போக்சோ மற்றும் குழந்தை திருமணம் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்….