வாலாஜாபாத்: தினகரன் செய்தி எதிரொலியால், நாயக்கன்பேட்டை ஊராட்சியில் இயங்கி வரும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நுழைவு வாயில் பகுதிகளில் முட்புதர்கள் அகற்றப்பட்டது. இதனால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வாலாஜாபாத் ஒன்றியம் நாயக்கன்பேட்டை ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஒன்றிய ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், இ-சேவை மையம், ஊராட்சி மன்ற அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இந்நிலையில், இங்கு செயல்படும் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் நுழைவு வாயில் பகுதியில் புதர்களாக காணப்படுவதால், அதிலிருந்து விஷப்பூச்சி மற்றும் பாம்பு உள்ளிட்டவைகள் பள்ளி வளாகத்துக்குள் வருவதாக பெற்றோர், சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் என செய்தி தினகரன் நாளிதழில் படத்துடன் வெளியாகின. இதனையடுத்து, ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், பள்ளி வளாகத்தின் நுழைவு வாயில் பகுதிகளில் முட்புதர்களை அகற்றி சீரமைத்தனர். இது அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.