நாராயண்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிந்து சர்பஞ்ச் பகுதியில் கடந்த ஆக. 15ம் தேதி சுதந்திர தினத்தன்று, ஐடிபிபி உதவி கமாண்டன்ட் சுதாகர் ஷிண்டே தேசிய கொடியை ஏற்றிவைத்தார். அப்போது கிராம மக்களிடம், நக்சல்களிடம் இருந்து எவ்வாறு விலகி இருப்பது என்பது குறித்து அறிவுரைகளை கூறினார். மக்களுக்கு தேவையான உதவிப் பொருட்களையும் வழங்கினார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில், நாராயண்பூரில் நக்சல்களுடன் நடந்த மோதலில் ஐடிபிபி உதவி கமாண்டன்ட் சுதாகர் ஷிண்டே மற்றும் ஏஎஸ்ஐ குர்முக் சிங் ஆகியோர் நக்சல் கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தனர். இதுகுறித்து பஸ்தார் ஐஜிபி சுந்தர்ராஜ் கூறுகையில், ‘ஐடிபிபி வீரர்கள் ஷிண்டே, குருமுக் சிங் ஆகியோர் நக்சல் கும்பலால் சுடப்பட்டு இறந்தனர். சுதந்திர தினத்தன்று மூவர்ணக் கொடி ஏற்றிய அதே இடத்தில் அன்று மாலை, பதுங்கியிருந்த நக்சல் கும்பலால் இருவரும் சுடப்பட்ட நிலையில் வீரமரணம் அடைந்தனர். மகாராஷ்டிராவின் நான்டெட் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் ஷிண்டே, நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கடமேடா முகாமில் பணியமர்த்தப்பட்டார். குர்முக் சிங் பஞ்சாப் மாநிலம் ராய்கோட்டை சேர்ந்தவராவார். வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு, அவர்களின் உடல்கள் அவர்களின் கிராமங்களுக்கு அனுப்பப்பட்டது’ என்றார். …