தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த ஒருநபர் விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிவடைந்ததால் தமிழ்நாடு அரசிடம் விரைந்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடியில் சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி பொதுமக்கள் தன்னெழுச்சி போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் தடியடியில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணாஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடத்தி வருகிறது. 36 கட்டங்களாக நடைபெற்ற விசாரணையில் 1426 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு 1048 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதியப்பட்டது. இந்த நிலையில் விசாரணை அறிக்கையை விரைந்து அரசிடம் சமர்ப்பிக்க ஆலை எதிர்ப்பாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டிற்கு காரணமானவர்கள் விரைந்து தண்டிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள அவர்கள் ஸ்டெர்லைட் அலைக்கு எதிராக தமிழக அரசு சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வந்து ஆலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர். …