துவரங்குறிச்சி, பிப்.16: துவரங்குறிச்சியில் மக்களின் குடியிருப்பு பகுதிக்கு வந்த 10 அடி நீள மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியை அடுத்த சேத்துப்பட்டி முத்தாழ்வார்பட்டி குடியிருப்பு பகுதி அருகில் மலைப்பாம்பு ஒன்று கிடந்ததை கண்ட பழனிச்சாமி என்பவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக துவரங்குறிச்சி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தார்.
தகவலின்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மனோகர் மற்றும் சிறப்பு நிலைய அலுவலர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 10 அடி நீளம் கொண்ட மலைப் பாம்பை சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு பாம்பு பிடிப்பான் கருவியால் லாவகமாக பிடித்தனர். பின்னர் பிடிக்கப்பட்ட மலைப்பாம்பு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் மலைப்பாம்பை வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.