நிலக்கோட்டை, பிப். 16: நிலக்கோட்டை அருகே பள்ளபட்டி கிராமம் சாண்டலார்புரம் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராமநாதன் மனைவி சுமதி (34). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் தனது மகளுடன் வீட்டில் இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த நரசிம்மன், தனது மாமா முருகனை ஏன் தவறாக பேசினாய் எனக்கூறி சுமதியை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் அலறியடித்து வெளியே ஓடி வந்த சுமதியை நரசிம்மனின் மாமா முருகன், உறவினர்கள் லட்சுமி, முருகேஸ்வரி ஆகியோரும் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சுமதி அளித்த புகாரில் அம்மையநாயக்கனூர் போலீசார் நரசிம்மன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.