திருவெறும்பூர்: திருவெறும்பூர் அருகே மஞ்சத்திடல் அகரம் பகுதியில் உள்ள அங்காளபரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதில் பெண் சித்தர்கள் உட்பட 18 சித்தர்கள் தமிழ் மொழியில் யாக சாலை பூஜை நடத்தினர். திருவெறும்பூர் அருகே உள்ள மஞ்சத்திடல் அகரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி கோயில் உள்ளது. அந்தப் பகுதி மக்கள் சிலரின் குலதெய்வமாகவும், வழிபாட்டு தெய்வமாகவும் இருந்து வருகிறது. இக்கோயிலின் பரிவார தெய்வங்களான வலம்புரி விநாயகர், பாலமுருகன், வாராஹி அம்மன், சீனிவாச பெருமாள், பத்மாவதி அம்மன், சொர்ண காலபைரவர் ஆகிய பரிவார தெய்வங்கள் உள்ளன. கோயில் கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது.
இந்த விழாவிற்கு 18 சித்தர்கள் வழியில் யாகசாலை வேள்வி பூஜைகள் அனைத்தும் தமிழ் மொழியில் நடத்தப்பட்டது. யாகசாலை பூஜையில் பெண் சித்தர்களும் அமர்ந்து யாக யாகசாலை பூஜையில் ஈடுபட்டனர். இந்த கும்பாபிஷேக விழாவில் மஞ்சத்திடல், அகரம் சுற்றுவட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.