செங்கம்: செங்கம் தாலுகா அலுவலக நுழைவு வாயில் மேல்பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதை தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகா அலுவலகத்தில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் அலுவலக நுழைவாயில் மேல்பகுதியில் திடீரென தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்து பணியில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் வருவாய் துறை காவல் துறையினர் தீ பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து, உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மேல் பகுதியில் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீ விபத்து ஏற்பட்டவுடன் மின்சாரத்துறையினர் மின் இணைப்பை துண்டித்து பெரும் அசம்பாவிதம் மற்றும் பொருட்சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் விபத்துக்கு காரணம் மேல் பகுதியில் உலர்ந்த இலைகள் மற்றும் மின்சார வயர் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
மேலும் சம்பவ இடத்துக்கு வருவாய் ஆய்வாளர் ஞானவேல், கிராம நிர்வாக அலுவலர் விஜயகுமார் மற்றும் காவல்துறை வருவாய் துறையினர் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ பரவாமல் தடுத்து நடவடிக்கை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.