தோகைமலை, ஜன.25: கடவூர் அருகே உள்ள தரகம்பட்டியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. கரூர் மாவட்டம் கடவூர் அருகே தரகம்பட்டியில் 14வது தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேர்தல் தனித் துணை வட்டாட்சியர் சத்யமூர்த்தி தலைமை வகித்தார். தரகம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணிக்கு கல்லூரி முதல்வர் ஹேமா நளினி, தரகம்பட்டி ஒன்றிய கவுன்சிலர் கோமதி பிரபாகரன், கல்லூரியின் நாட்டு நலப்பணிகள் திட்ட அலுவலர் பாலுசாமி முன்னிலை வகித்தனர். முன்னதாக வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது. கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி வையம்பட்டி மெயின்ரோடு, தரகம்பட்டி கடைவீதி மற்றும் முக்கிய தெருக்கள் வழியாக மீண்டும் கல்லூரியில் நிறைவுபெற்றது. இதில் ஓட்டு அளிப்பது நமது கடமை, ஓட்டுக்கு பணம் பெறுவதை தவிர்க்க வேண்டும், 100 சதவீதம் வாக்களிக்க முன்வர வேண்டும் என்று பல்வேறு விழிப்பணர்வு கோசங்களை எழுப்பினர். மேலும் விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியவாறு கல்லூரி மாணவ மாணவிகள் பேரணியாக சென்றனர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் உள்பட கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.