சிதம்பரம்: சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைத்து தரவேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பகுதியில் விழுப்புரம்- நாகை இடையே 4 வழிச்சாலை பணி நடைபெற்று வந்தது. இப்பணி முடிக்கப்பட்டுள்ள இடத்தில் தற்போது போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இந்த புறவழி சாலையில் அதிக வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் இச்சாலையில் பல இடங்களில் மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில் சிதம்பரம் அருகே உள்ள லால்புரம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதி வழியாக செல்லும் புறவழிச்சாலையில் மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென அப்பகுதியினர் பல போராட்டங்கள் நடத்தி கோரிக்கை வைத்துள்ளனர். இப்புறவழிச்சாலை வழியாக பாலத்தங்கரை, அம்பலத்தாடி குப்பம், கீழமூங்கலடி, மேலமூங்கிலடி, தையாகுப்பம், சி.முட்லூர் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்களும், அதேபோல் லால்புரம், கிழமூங்கிலடி, சி.முட்லூர் உள்ளிட்ட 3 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் செல்ல வேண்டும்.
மேலும் சென்னை, பாண்டி, கடலூர் பகுதியில் இருந்து இவ்வழியாக சீர்காழி, மாயவரம், நாகப்பட்டினம், செல்லும் டூ விலர், ஆட்டோ, கார், வேன், மினி பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது அடிக்கடி விபத்துகளும் நடக்கிறது. இதனால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், விவசாயிகள், அலுவலகப் பணி மற்றும் அவசர தேவைக்கு செல்வோர் உள்பட அனைத்து தரப்பினரும் பாதுகாப்பற்ற நிலையிலே செல்ல வேண்டி உள்ளது. எனவே இந்த புறவழிச்சாலையில் உடனடியாக மேம்பாலம் அல்லது சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.