பெரம்பூர்: தன்னுடன் பேச மறுத்த கல்லூரி மாணவரை கத்தியால் குத்திய சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் சேர்த்தனர்.சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வம்சி (18). இவர் ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பிசிஏ முதல் வருடம் படித்து வருகிறார். இவரும் சென்னை பெரவள்ளூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். இந்த நிலையில், சில மாதங்களாக சிறுவனுடன் பழகுவதை வம்சி நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இதனால் கடும் கோபத்தில் இருந்த சிறுவன் நேற்று மதியம் கொளத்தூர் பாலாஜி நகர் நாகாத்தம்மன் கோயில் அருகே வம்சி சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை மறித்து சிறுவன் ஏன் என்னிடம் பேச மறுக்கிறீர்கள்’ என்று கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். அவர்கள் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென சிறுவன், மறைத்து வைத்திருந்த கத்தியால் வம்சியின் முதுகு, வயிற்று பகுதியில் சரமாரியாக குத்திவிட்டு தப்பிவிட்டார். ரத்தவெள்ளத்தில் துடித்த வம்சியை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்படி, கொளத்தூர் இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த 17 வயது சிறுவனை கைது செய்தார். இந்த சிறுவன் மீது கொளத்தூர், புழல் காவல் நிலையங்களில் குற்றவழக்குகள் உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுவனை சென்னையில் உள்ள சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்….