அசாம்கர்: டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி காதலன் படுகொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதே போன்ற மற்றொரு சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அசாம்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆராதனா(20). இவரும் பிரின்ஸ் யாதவ் என்ற வாலிபரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். ஆனால் பெற்றோர் விருப்பத்தின்பேரில், ஆராதனா வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரின்ஸ் தனது முன்னாள் காதலியை கொல்வதற்கு திட்டமிட்டுள்ளார். திருமணத்துக்கு பின்னரும் பிரின்சுடன் ஆராதனா தொடர்ந்து தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஈசாக்பூரில் ஆராதனா வசித்து வந்த நிலையில் கடந்த 9ம் தேதி பிரின்சுடன் கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது பாஸ்சிமி கிராமத்தில் உள்ள கரும்பு தோப்புக்கு ஆராதனாவை அழைத்து சென்ற பிரின்ஸ் தனது உறவினர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டி சற்று தொலைவில் இருந்த கிணற்றில் வீசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர். மகள் வீட்டு திரும்பி வராததால் அவரை காணவில்லை என போலீசில் ஆராதனா பெற்றோர் புகார் செய்துள்ளனர். இந்நிலையில் கடந்த 15ம் தேதி கிணற்றில் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. சடலத்தை மீட்டு போலீசார் விசாரணை நடத்தியதில் காணாமல் போன ஆராதனா என்பது தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் சனியன்று பிரின்சை பிடித்து விசாரிக்கையில் அவர் ஆராதனாவை கொன்று 6 பாகங்களாக துண்டு போட்டது தெரியவந்தது. ஆராதனாவின் உடல் பாகங்களை மீட்பதற்காக நேற்று முன்தினம் பிரின்சை போலீசார் அழைத்து சென்றனர். அப்போது போலீசாரிடம் இருந்து தப்பி செல்ல முயன்ற பிரின்ஸ் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி மடக்கி பிடித்தனர். * சிபிஐக்கு மாற்ற கோரி வழக்குடெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டிய அப்தாப் அமீனுக்கு நேற்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருந்தது. ஆனால் இது கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டதாக தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார். அல்தாபுக்கு பாலிகிராபிக் சோதனை செய்வதற்காக ஒப்புதல் பெறப்பட்டு, அதனை தொடர்ந்து உண்மை கண்டறியும் சோதனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே இந்த வழக்கை டெல்லி போலீசாரிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது….