சேலம்: சேலத்தில் கொலையான பங்களாதேஷ் அழகி நடத்திய ஸ்பா சென்டரில் பாலியல் தொழிலுக்கு துணை போனதாக எஸ்.ஐ., உள்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சேலம் சங்கர்நகரில் மசாஜ் சென்டர் நடத்தி வந்தவர் பங்களாதேஷ் நாட்டைச்சேர்ந்த அழகி தேஜ்மேண்டல் (27). இவர் வின்சென்ட்டில் உள்ள காம்ப்ளக்ஸ் ஒன்றில் தங்கியிருந்தார். கடந்த மாதம் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு அவரது உடல் சூட்கேஸில் அடைத்து வீட்டில் உள்ள பரண் மீது வீசப்பட்டு கிடந்தது. இதுதொடர்பாக அஸ்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மசாஜ் சென்டரில் வேலை பார்த்த இளம்பெண்களை அறையில் தங்க வைத்திருந்தார். தேஜ்மேண்டல் கொலைக்கு பிறகு ஆண் உதவியாளர் லப்லு மற்றும் 3 இளம்பெண்கள் தலைமறைவாகினர். இதில், லப்லு, நிஷி ஆகியோர் காதலர்கள் என கூறப்படுகிறது. இவர்கள் பங்களாதேஷ் தப்பி சென்றுவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். தேஜ்ேமண்டலின் காதலன் பிரதாப்பை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கொலை செய்யப்பட்ட அழகி தேஜ் மேண்டல், அவரது காதலன் ஆகியோர் சேலம் மாநகரில் ஸ்பா சென்டர் என்ற பெயரில் பெரும்பாலான இடங்களில் பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளனர். அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஸ்பா சென்டரில் சோதனை செய்த போது பாலியல் தொழில் செய்தது தெரியவந்தது. ஆனால், வழக்கில் அவர் பெயர் சேர்க்கப்படவில்லை. இந்த கும்பலுக்கு துணை போன போலீசார் குறித்து துணை கமிஷனர் மாடசாமி விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கொலையான தேஜ்மேண்டல் ஸ்பா சென்டரில் விபசாரத்திற்கு அஸ்தம்பட்டியில் அப்போது பணியில் இருந்த எஸ்ஐ ஆனந்தகுமார், எஸ்எஸ்ஐகள் சேகர், கலைச்செல்வன், ஏட்டு மணிகண்டன் துணை போனது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் நஜ்முல்கோடா உத்தரவிட்டார். …