நிலக்கோட்டை, ஜூன் 19: செம்பட்டியை அடுத்த ஜெ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் கார்த்திக்ராஜா (24). அதே ஊரை சேர்ந்தவர் லத்தியா (19) திண்டுக்கல் அருகிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், கார்த்திக்ராஜாவும், லத்தியாவும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு, லத்தியாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது.
இதையடுத்து கடந்த ஜூன் 16ம் தேதி இரவு இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, மறுநாள் வாடிப்பட்டி பகுதியிலுள்ள ஒரு கோயிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு காதல் ஜோடி கார்த்திக்ராஜா, லத்தியா பாதுகாப்பு கேட்டு செம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். பின்னர் போலீசார் இருவருக்கும் திருமண வயது உள்ளதால் யாரும் தொந்தரவு செய்ய கூடாது எனக்கூறி அவர்களை பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.