புதுச்சேரி, ஜூன் 8: புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் ஏற்பட்ட தொய்வு கண்டித்து தலைமை செயலகத்தை முற்றுகையிட்ட சுயேட்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி, அரசு விழா நடைபெற்ற கம்பன் கலையரங்கம் வந்து கேட் ஏறி குதித்து உள்ளே சென்று தலைமை செயலரிடம் சரமாரி கேள்வி எழுப்பினார். இதனிடையே சுயேட்சை எம்எல்ஏ நேரு மீது போலீசார் வழக்குபதிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைமை செயலர் மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சக எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் ஆட்சியாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நிலவி வந்த பனிப்போர் வெட்ட வெளிச்சமானது. இவ்விவகாரத்தை தொடர்ந்து சபாநாயகருடன், தலைமை செயலர் சந்தித்து பேச்சு நடத்தினார். அப்போது எம்எல்ஏ மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்வதோடு, மக்கள் பிரதிநிதிகளுக்கு அரசு அதிகாரிகள் உரிய மரியாதையை வழங்க வேண்டுமென அறிவுறுத்தினார். இந்த நிலையில் புதுச்சேரி சுயேட்சை எம்எல்ஏ நேரு மீது போடப்பட்ட வழக்குகள், இன்ஸ்பெக்டர் கண்ணன் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்வதற்கு உள்துறை செயலர் கேசவன் மூலம் மேற்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.