சுசீந்திரம், ஜன.22: சுசீந்திரம் அருகே மத்திய ரிசர்வ் போலீஸ் வீட்டின் கதவை உடைத்து 5 பவுன் நகை மற்றும் G20 ஆயிரம் பணம் திருடப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுசீந்திரம் அருகே காக்கமூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (70). அவரது மகன் திருநாவுக்கரசு. திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய ரிசர்வ் போலீசில் பணியாற்றி வருகிறார். மகனின் வீட்டை ராதாகிருஷ்ணன் தான் பராமரித்து வருகிறார்.
இதற்கிடையே கடந்த 18ம்தேதி ராதாகிருஷ்ணன் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். பின்னர் மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது வீட்டின் உள்புறம் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன.
பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது. இது தவிர வீட்டில் வைத்து இருந்த பணம் G20 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது. இது தொடர்பாக ராதாகிருஷ்ணன் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். தொடர்ந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.