கீழக்கரை, ஜூலை 2: கீழக்கரையில் ஹஜ் பெருநாளையொட்டி சில இடங்களில் கண்காட்சி திடல் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வெளியூர் மற்றும் உள்ளளூரை சேர்ந்தோர் ஆயிரக்கணக்கானோர் வருகை தந்தனர். இந்நிலையில் கீழக்கரைக்கு கண்காட்சி திடலை காண வருகை தந்த 11வது படிக்கும் ஏர்வாடியை சேர்ந்த முகமது சுஹைல், கீழக்கரையில் நடந்து செல்லும் போது அப்பகுதியில் அமர்ந்திருந்த ஒருவரின் கால் பகுதியில் கவனிக்காமல் மிதித்தாராம். உடனே மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஆனால் சம்பந்தப்பட்ட நபர் மற்றும் அவருடன் இருந்த நபர்கள் சிறுவனை கடுமையாக தாக்கி துரத்தியுள்ளனர். வடக்கு தெரு பகுதியில் வைத்து அக்கும்பல் கையில் இருந்த ஆயுதங்களை எடுத்து சிறுவனின் கழுத்தில் வெட்ட முயற்சித்த போது சிறுவன் கையால் தடுத்ததில் சிறுவனுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதுகுறித்து கீழக்கரை போலீசார் விசாரித்து வந்த நிலையில் கீழக்கரை அண்ணாநகரை சேர்ந்த சரண் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.