புழல், ஜன.31: சென்னை புழல் சிறைச்சாலையில் தண்டனை சிறை, விசாரணை சிறை மற்றும் பெண்கள் சிறைகள் உள்ளன. இங்கு 200 பெண்கள் உட்பட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் வழக்கம்போல் விசாரணை சிறையில் மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த சிறையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ரமேஷ் பஞ்சாட்சரம் (28) என்பவர், மாதவரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறி, திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் உள்ளார்.
இவர், சாப்பாட்டை எடுத்துச் சென்று மற்றொரு கைதியான சென்னை மதுரவாயல் கன்னியம்மன் நகரைச் சேர்ந்த மூர்த்தி (23) என்பவரிடம் கொடுத்துள்ளார். அதை வாங்கிய மூர்த்தி, ஏன் சாப்பாடு குறைவாக உள்ளது எனக் கேட்டுள்ளார். இதனால் ரமேஷ் பஞ்சாட்சரத்துக்கும் மூர்த்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த ரமேஷ் பஞ்சாட்சரம், மூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் மூர்த்தியின் 2 பற்கள் உடைந்துள்ளன. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சக கைதிகள் இருவரையும் மடக்கிப் பிடித்து சண்டையை விலக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மூர்த்தியை சிறையில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.