Saturday, May 25, 2024
Home » சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது: ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓபிஎஸ் மனு

சட்டம்-ஒழுங்கு பிரச்னை, பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது: ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் ஓபிஎஸ் மனு

by kannappan

சென்னை: சட்டம்-ஒழுங்கு பிரச்னை மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலை உருவாகியுள்ளதால், வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நாளை அதிமுக பொதுக்குழு நடத்த அனுமதிக்க கூடாது என்று ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கடிதம் எழுதியுள்ளார். அதிமுக பொதுக்குழு நாளை நடைபெறுகிறது. இதில் எடப்பாடி பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தீர்மானம் நிறைவேற்ற அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. இதை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் அணியினர் முழுமூச்சாக இறங்கியுள்ளனர். ஆனாலும், எடப்பாடி அணியினர், எப்படியாவது நாளை பொதுக்குழு கூட்டத்தை நடத்தி, ஒற்றை தலைமை கோரிக்கையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.இந்த பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆவடி காவல் ஆணையருக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறி இருப்பதாவது: அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நாளை (23ம் தேதி) வானகரம், ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலசில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. பொதுவாக, அதிமுக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்ட செயலாளர்கள், முன்னாள் வாரிய தலைவர்கள் மற்றும் கட்சிக்காக தியாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக்குழுவிற்கு அழைப்பது நடைமுறை.அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பொதுக்குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டாம் என்ற தகவல் இணை ஒருங்கிணைப்பாளரால் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு கட்சியின் நிர்வாகிகளால் கூட்டத்தில் முடிவு செய்யப்படாத பொருள் பற்றி விவாதிக்கப்பட்டது. இதன் காரணமாக கட்சி தொண்டர்களிடையே சிறிய சலசலப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து 18ம் தேதி அதே தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் என்ற போர்வையில் சில சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்றன.இந்த தகவலை அறிந்த தொண்டர்கள் என்னை தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொள்ள மண்டபத்தில் இடமில்லை என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது என்ற தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். மேலும், செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்திற்கான தீர்மானங்கள் இறுதி செய்யப்படாமல் உள்ள நிலையில் கூட்டத்தை நடத்துவது பொருத்தமாக இருக்காது என்றும், கூட்டத்திற்கான பொருள் நிர்ணயம் செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என்றும் சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். கடந்த 18ம் தேதி தலைமை அலுவலகத்தில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்தேறின. இதன் காரணமாக கட்சி தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கட்சி நிர்வாகிகள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுவதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் நிலையும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நிலையும் உருவாகியுள்ளது. இதனையடுத்து கட்சி தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டுவிட்டர் மூலம் நான் வேண்டுகோள் விடுத்தேன். தற்போதுள்ள அசாதாரண சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். இவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, நாளை நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்த கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கட்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்து கடந்த 19ம் தேதி இணை ஒருங்கிணைப்பாளருக்கு (எடப்பாடி) நான் கடிதம் எழுதியிருந்தேன்.இப்படிப்பட்ட சூழ்நிலையில், கட்சியின் சட்டதிட்ட விதிகளுக்கு மாறாக திருவள்ளூர் மாவட்ட செயலாளர் பெஞ்சமின், செயற்குழு மற்றும் பொதுக்குழுவிற்கு பாதுகாப்பு கோரி தங்களிடம் விண்ணப்பித்துள்ளார். எங்கள் கட்சி சட்ட திட்ட விதிகள்படி, சட்ட நடவடிக்கை எடுக்க கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கு மட்டுமே முழு அதிகாரம் உள்ளது. மேலும், நாளை நடைபெற உள்ள செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்கலாம் என்று கட்சி இணை ஒருங்கிணைப்பாளருக்கு எழுதிய கடிதத்தின் விவரம் திருமண மண்டப மேலாளருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவுகின்ற அசாதாரண சூழ்நிலையில், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய கடமை காவல் துறைக்கு உள்ளபடியாலும், பென்ஜமின் பாதுகாப்பு கோரி இருப்பது தன்னிச்சையான முடிவாக இருப்பதாலும், கட்சிக்கு எதிரான நடவடிக்கை என்பதாலும், கூட்டத்திற்கான அனுமதி மறுக்க வேண்டுமென்று தங்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்….

You may also like

Leave a Comment

1 + 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi