Monday, June 17, 2024
Home » அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட பரபரப்பு பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிக்க திட்டம்: எடப்பாடி அணிக்கு ஆதரவாளர்கள் மாறுவதால் விரக்தி; கூட்டத்தை முடக்க காய் நகர்த்தல்

அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோரிக்கையால் உச்சக்கட்ட பரபரப்பு பொதுக்குழு கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணிக்க திட்டம்: எடப்பாடி அணிக்கு ஆதரவாளர்கள் மாறுவதால் விரக்தி; கூட்டத்தை முடக்க காய் நகர்த்தல்

by kannappan

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்காமல் ஓபிஎஸ் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு கூட்டத்தையே முடக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெறும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிவித்தனர். அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. மீண்டும் அதிமுக தலைவர்கள் இரு பிரிவாக பிரிந்து காரசாரமாக கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார். எனவே 23ம் தேதி (நாளை) நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடிக்கு, ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் கடிதம் எழுதினார். ஆனால் இதை ஏற்க எடப்பாடி திட்டவட்டமாக மறுத்து விட்டார். பொதுக்குழு கூட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் மேற்கொண்ட முயற்சிகள் கை கொடுக்கவில்லை. கோர்ட் பொதுக்குழு விஷயத்தில் தலையிட மறுத்தாலோ அல்லது எடப்பாடி அணியினருக்கு ஆதரவாக தீர்ப்பளித்தாலோ அது ஓ.பன்னீர்செல்வம் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். இந்தநிலையில் எடப்பாடி அணியினர் பொதுக்குழு கூட்டத்தை நடத்துவதற்கு சட்ட ரீதியாகவும் தயாராகி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக பொதுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து ஆதரவு கடிதங்கள் பெறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழுவில் சுமார் 2300 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் சுமார் 2000 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்து கடிதம் கொடுத்துள்ளனர். அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் இந்த கடிதம் பெறப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டத்தை  நாளை (23ம் தேதி) திட்டமிட்டபடி நடத்த வேண்டும் என்று அந்த கடிதத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் எழுதி கையெழுத்திட்டுள்ளனர். ஏற்கனவே திட்டமிட்டப்படி தீர்மானக்குழு வரையறுத்துள்ள தீர்மானங்களை பொதுக்குழுவில் தாக்கல் செய்து ஒப்புதல் பெற எடப்பாடி அணியினர் முடிவு செய்து உள்ளனர். அப்போது ஒற்றைத் தலைமை தீர்மானம் தனியாக கொண்டு வரப்படும் என்று தெரிகிறது. அந்த தீர்மானத்தில், அதிமுகவில் மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த பதவிக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் கொண்டு வந்து நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை தடுத்து நிறுத்த ஓ.பன்னீர்செல்வம் இறுதிகட்ட முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். அதற்கு வெற்றி கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதே நேரத்தில் அவர் தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், நேற்று முன்தினம் ஓபிஎஸ் எழுதிய கடிதத்துக்கு எடப்பாடி தரப்பில் இருந்து நேற்று பதில் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில், ‘திட்டமிட்டபடி 23ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போதுள்ள சூழ்நிலையில், அதிமுக பொதுக்குழு நடந்தால், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை பிடிப்பது உறுதியாகி உள்ளது. அப்படியே, எடப்பாடி பொதுச்செயலாளர் ஆகிவிட்டால், அதிமுக கட்சியில் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் முடிந்தவரை எடப்பாடியின் இந்த முயற்சியை தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பினர் கடைசி கட்ட முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கோர்ட் தீர்ப்புக்காக காத்திருக்கின்றனர். வழக்கின் முடிவு தங்களுக்கு சாதகமாக அமையாவிட்டால், நாளை (23ம் தேதி) நடைபெறும் பொதுக்குழு கூட்டத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எந்த தீர்மானத்தையும் பொதுக்குழுவில் நிறைவேற்ற முடியாது என்பதால் இந்த முடிவை ஓபிஎஸ் எடுப்பார் என்று கூறப்படுகிறது. ஓபிஎஸ் கலந்து கொள்ளாதபட்சத்தில், ஒற்றைத் தலைமை குறித்து பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்றத்தை நாடவும் ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளார். மேலும், தனியாக பொதுக்குழுவை கூட்டி, உண்மையான அதிமுக என்று கூறவும் ஓபிஎஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், நேற்று முன்தினம் வரை ஓபிஎஸ்சுக்கு ஆதரவு தெரிவித்து வந்த விருதுநகர் அதிமுக மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், நெல்லை மாவட்ட செயலாளர் கணேசராஜா, திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் வி.அலெக்சாண்டர் ஆகியோர் நேற்று எடப்பாடி அணிக்கு தாவி விட்டனர். இதுபோன்ற சம்பவங்களாலும் ஓபிஎஸ் அணியினர் விரக்தி அடைந்துள்ளனர்.* அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது: இபிஎஸ்அதிமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் நேற்று முன்தினம், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். அவர்களிடம் எடப்பாடி பேசும்போது, ‘அதிமுகவின் ஒற்றைத் தலைமை விவகாரத்தை கொண்டு கட்சியை பலவீனப்படுத்த சிலர் முயற்சிக்கிறார்கள். பலம் வாய்ந்த கட்சி அதிமுக, வீழ்ந்ததாக சரித்திரம் இல்லை. அதிமுகவை அழிக்க யாராலும் முடியாது. ’ என்றார். அதேநேரம் ஓபிஎஸ் அணியினர், அதிமுக கட்சி சட்ட விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்து இல்லாமல் எந்த தீர்மானமும் நிறைவேற்ற முடியாது என்று இபிஎஸ் வீடு முன் சுவரொட்டி ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்….

You may also like

Leave a Comment

17 − 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi