கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த அமரம்பேடு கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தை ஒட்டி சத்தியவேடு – கவரப்பேட்டை நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலை வழியாக தான் பூதூர், மாதர்பாக்கம், கண்ணன்கோட்டை, கரடிபுத்தூர், பூவலம்பேடு, சின்ன புலியூர், நேமளூர் மற்றும் பல்வேறு வெளிமாநில இருசக்கர வாகனங்கள், கனரக வாகனங்கள், வேலைக்கு செல்பவர் மற்றும் காய்கறி, உதிரி பாகங்களை ஏற்றுக்கொண்டு தினந்தோறும் சென்று வருகின்றனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அமரம்பேடு அருகே சாலைகளில் பள்ளம் ஏற்பட்டதால் கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளனர். அதன்பேரில் அதிகாரிகள் சாலை போடுவதற்காக பொக்லைன் இயந்திரம் மூலம் சாலையை சீரமைக்க பள்ளம் தோண்டினர். ஆனால் பள்ளம் தோண்டப்பட்டு வாரக்கணக்கில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விபத்து ஏற்படுவது வழக்கமாகி உள்ளது. தொடர்ந்து நேற்று முன்தினம் ஒருவர் அவ்வழியாக சென்றபோது நிலை தடுமாறி பலத்த காயமடைந்து சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமரம்பேடு கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் இளைஞர்கள் கவரப்பேட்டை – சத்தியவேடு சாலையில் அமர்ந்து ேநற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பாதிரிவேடு போலீசார் மற்றும் கும்மிடிப்பண்டி துணை கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலை மறியில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் செவி சாய்க்கவில்லை. பின்னர் உடனடியாக சீரமைக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். …