வேதாரண்யம்: நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ரவி என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் ரவி (48), அவரது மகன் ரகுபதி (23), ரவியின் மருமகன் நாகூரை சேர்ந்த ஜெயபால் (24) ஆகிய மூவரும் நேற்று முன்தினம் மதியம் 1 மணிக்கு மீன் பிடிக்க கடலுக்கு சென்றவர்கள் கரை திரும்பவில்லை.
புஷ்பவனம் பகுதி மீனவர்கள் தேடி சென்றபோது, கோடியக்கரைக்கு தென்கிழக்கே படகு கவிழ்ந்து இருந்ததும், அந்த படகு மீது 3 பேரும் அமர்ந்து உயிருக்கு போராடி கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனை பார்த்த மீனவர்கள், கவிழ்ந்த படகுடன் அவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அவர்களை வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இதுபற்றி மீனவர்கள் கூறுகையில், கோடியக்கரைக்கு தென்கிழக்கே இன்று (நேற்று) அதிகாலை 4 மணிக்கு சென்ற போது, படகில் திடீரென்று ஓட்டை விழுந்து தண்ணீர் ஏறியதால் படகு கவிழ்ந்தது. கவிழ்ந்த படகு மீது உட்கார்ந்திருந்து மாலை 3 மணி வரை உயிருக்கு போராடி கொண்டிருந்தோம். சக மீனவர்கள் வந்து எங்களை மீட்டு கரை கொண்டு சேர்த்தனர் என்றனர்.