திருப்பூர்: திருப்பூர் சோளிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (35). இவர் வளையங்காடு பகுதியைச் சேர்ந்த பாஜ ஊடக பிரிவு நிர்வாகி முருகேசன் என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து கடந்த 4 வருடங்களாக பனியன் கம்பெனி நடத்தி வருகிறார். இதற்காக சுமார் 1 லட்சம் முன்பணம் கொடுத்துள்ளார். ஒரு மாத காலமாக பனியன் கம்பெனிக்கு ஆர்டர் இல்லாததால் கம்பெனியை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இதனால் ஒரு மாத வாடகையான 18,500 ரூபாயை முருகேசனுக்கு சுந்தரமூர்த்தி கொடுக்காமல் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் சுந்தரமூர்த்தி கம்பெனியின் பூட்டை உடைத்து ₹5 லட்சம் மதிப்புள்ள 30 தையல் இயந்திரங்களை முருகேசன் எடுத்து விற்பனை செய்துள்ளார். இது குறித்து சுந்தரமூர்த்தி வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து முருகேசனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.