சங்கரன்கோவில், ஏப்.7: சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் உள்ள 4 பதற்றமான வாக்குச்சாவடிகளை தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்.19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ராஜபாளையம், வில்லிப்புத்தூர், வாசுதேவநல்லூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும். சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் மொத்தம் 2,47,341 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 1,20,299 பேர். பெண் வாக்காளர்கள் 1,27,033 பேர், மூன்றாம் பாலினத்தவர் 9 பேர் ஆவர். இந்த தொகுதியில் 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. 275 வாக்குச்சாவடிகளுக்கும் 330 கண்ட்ரோல் யூனிட், 330 பேலட் யூனிட், 357 இவிபேட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த சட்டமன்ற தொகுதியில் 26 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என்றும், 2 வாக்குச்சாவடிகள் மிகவும் பதற்றமானவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. இந்நிலையில் சங்கரன்கோவிலில் பதற்றமான வாக்குச் சாவடிகளாக கண்டறியப்பட்டுள்ள அம்பேத்கர்நகர் ஆர்.சி.நடுநிலைப்பள்ளி, காந்திநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, கழுகுமலை சாலையில் உள்ள இமாம்கசாலி பள்ளி, கக்கன்நகர் நகராட்சி நடு நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளிகளில் அமையவுள்ள வாக்குச்சாவடிகளை தென்காசி மாவட்ட எஸ்பி சுரேஷ்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் சங்கரன்கோவில் டிஎஸ்பி சுதீர், இன்ஸ்பெக்டர் மனோகரன் ஆகியோர் உடனிருந்தனர்.